Saturday, September 10, 2011

காணாமலே போகட்டும் இந்தச் சேனல்கள்...

தமிழகத்தில் இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படுவது அரசு கேபிள் தொலைக்காட்சி பற்றித்தான். நாட்டில் எண்ணற்ற பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாலை ஆறு மணி ஆனதும் இல்லத்தரசிகள், இளைஞர்கள், ஆண்களும்கூட தாங்கள் விரும்பும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்க்காவிட்டால் அன்று இரவு தூங்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு, பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இது மகிழ்ச்சி தரும் செய்திதான்.

ஆனால், இந்தக் கேபிள் ஒளிபரப்பு தொடங்கியதும், பெண்கள் பட்டபாடு இவ்வளவுதான் என்று சொல்லி மாளாது. ஏனென்றால், "எங்க டி.வி.யில் இந்தத் தனியார் சேனல் தெரியவில்லை, அந்தச் சேனல் தெரியவில்லை' என்று மளிகைக் கடைகளிலும், வீதிகளிலும், குடிநீர் பிடிக்கும்போதும் மாறிமாறி நலம் விசாரிப்பதுபோல, டி.வி. சேனல்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

இது மட்டுமல்ல, "அய்யோ, இந்த சீரியலில் அந்தக் காட்சிக்கு பின் என்ன ஆகுமோ. அந்தச் சேனலில் அவருக்கும் அவளுக்கும் விவாகரத்து நடக்குமோ, நடக்காதோ, திருமணம் நடக்குமோ, நடக்காதோ' என்று தனது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டுவார்களோ, அதைவிட அதிகம் என்றுதான் கூற வேண்டும்.

இது மட்டுமல்ல, பிற மாவட்டத்தில் இருக்கும் தங்களது தோழிகளிடமும், உறவினர்களிடமும் செல்போனில் தொடர்புகொண்டு, "எங்கள் பகுதியில் இந்தச் சேனல்கள் தெரிவதில்லை, உங்கள் பகுதியில் அனைத்துச் சேனல்களும் தெரிகிறதா?' என்று கேட்பதும், அப்படி சேனல்கள் ஒளிபரப்பு ஆகிறது என்றால், அந்தச் சேனல்களில் வரும் சீரியலைப் பற்றி விசாரிப்பதையும் தவிர்க்கவில்லை.

அட, இந்தப் பிரபல சேனல் தெரியவில்லையே. இனி என்ன செய்வது? மேலும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, சீசன் 1, சீசன் 2, சீசன் 3 என்ற சேனல்களின் குரலை இனி கேட்க முடியாதே.

எவ்வளவோ கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புப் பெற்று, கஞ்சியும் கூழும் குடித்து, மழையிலும் வெயிலிலும் அலைந்து எடுக்கப்பட்ட படங்களைக் குறைந்த விலைக்கு வாங்கியும், தர மறுப்பவர்களை மிரட்டியும் திருவிழா நாள்களில் புதுத் திரைப்படங்களை ஒளிபரப்பி நம்மைச் சந்தோஷப்படுத்திய சேனல்கள் இனி வருமோ? வராதோ? என்று புலம்பித் தள்ளுகின்றனர் பெண்கள், இளைஞர்கள்.

ஏன் இந்த மனக்குமுறல்? அப்படி என்ன கிடைக்கப் போகிறது இந்தச் சேனல்களால் என்ற கேள்விகளை இவர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை அளிக்கும் வகையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சிறப்பானது, பாராட்டுக்குரியது.

குறிப்பிட்ட தனியார் சேனல்களைத் தடை செய்வதால் நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. அதில் முதலாவது, கல்வித் தரம்.

இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் மாணவர்களில் பலர் மாலையில் ஆறு மணிக்கு மேல் தொலைக்காட்சி சீரியல்களையும், பிற நிகழ்ச்சிகளையும் பார்த்து நேரத்தை வீணாக்குகின்றனர்.

தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, படித்த பெற்றோர்கூட முறையாகக் கவனிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சீரியல் தொடங்குவதற்கு முன் குழந்தைகளின் வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாகக் குழந்தைகளை மிரட்டி, உருட்டி கற்றுக் கொடுக்கும் பெற்றோரையும் பார்க்க முடிகிறது. எனவே, இப்போது தடை செய்யப்பட்டிருக்கும் சேனல்களை நிரந்தரமாகத் தடை செய்தால் நம்நாட்டில் தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக உயரும், குழந்தைகளுக்கு நிரந்தர அன்பும் கிடைக்கும் என்பது உறுதி.

இரண்டாவதாக, செய்தித்தாள் மற்றும் புத்தகம் வாசிப்போர் அதிகரிப்பர். கேபிள் தொலைக்காட்சிகள் வளர்ச்சி அடைந்த பின்னர் மக்களிடம் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. ஏன் செய்தித்தாள்களைக்கூட படிக்க முன்வருவதில்லை. எனவே, மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் இனி புத்தகங்களை வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்ததாக, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தைவிட சீரியல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், மனஅழுத்தம் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் அதிகம்.

மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒன்றுகூட நல்வழிப் படுத்துபவையாக இல்லை. கணவன்- மனைவி உறவு, மாமனார் மாமியார் மற்றும் உறவினர்களுடன் நல்ல அணுகுமுறையும் இந்த சீரியல்களால் மாறி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் கணவன் அலுவலகத்தில் இருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்தால், அவரிடம் முகம்கொடுத்துப் பேசாமலும், டீ, காபி கூட போட்டுத் தராத மனைவியர் இருக்கிறார்கள். இரவு நேரத்தில் வீட்டுக்கு உறவினர்கள் வருவதையே விரும்பாத பெண்களும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மாற்ற இந்த நடவடிக்கை தேவை.

எனவே, குடும்பம் ஒரு கோவில் என்று கூறுவதுபோல குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழவும், இன்றைய இளைய தலைமுறைக்கு நல்வழி காட்டும் வகையிலும், தமிழக மக்களை ஆட்டிப்படைத்த சில சேனல்கள் இல்லாமல் இருந்தாலே குடும்பத்தில் சந்தோஷம் பெருகும், நல்லது நடக்கும்.

நன்றி தினமணி

1 comment:

சி.பி.செந்தில்குமார் said...

>>மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒன்றுகூட நல்வழிப் படுத்துபவையாக இல்லை. கணவன்- மனைவி உறவு, மாமனார் மாமியார் மற்றும் உறவினர்களுடன் நல்ல அணுகுமுறையும் இந்த சீரியல்களால் மாறி வருகிறது.


குட்

Post a Comment