பேச்சிலரா இருந்தா சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது கஷ்டம் என்று சொல்வது உண்டு. ஆனால் சில ஹவுஸ் ஓனர்கள் இவர்களுக்கு கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் ஆர்வமாக இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு.
1) முன்பு குடியிருந்தவர்களின் வாடகையை விட அதிகமாக சொன்னால், காரணம் ஏதும் கேட்காமல் சரி என்று தலையை ஆட்டுவது. (நம்மளை வீடு பார்க்க கூட்டி வருகிறவன் ஒரு பயம் காட்டித்தான் கூட்டி வருவான், உலகத்துல வேற யாருமே பேச்சிலருக்கு வீடு கொடுக்க மாட்டாங்க. இவங்க மட்டும் தான் கொடுப்பாங்க, காசு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குமுனு)
2) வடக்கு வாசல், கிழக்கு வாசல் என்ற முறைவாசல்களுக்கு நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று அவர்களிடன் பொறுப்பை ஒப்படைத்து பணம் கொடுத்து விடுவது. (இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை கட்டிக்கொண்டு கோலமா போட முடியும்)
3) தண்ணீர், கார்ப்பரேசன், மின்சாரம் என்று எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு மொத்த தொகையை மாதம் மாதம் கேட்டால் வாயை மூடிக்கொண்டு கொடுத்துவிடுவது.(காலையிலே தூக்கம் எழுவதே லேட்டாக தான் இருக்கும். அந்த நேரம் தண்ணி வரவில்லை, பாத்ரூம் சரியில்லை என்று நிற்கமுடியுமா? இது அவங்களுக்கும் தெரியும்.)
4) காலையில் குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் எல்லோரும் எழுந்து ஆபிஸ் கிளம்பிய பிறகுதான் அவசர அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு ஆபிஸுக்கு ஓடுவது. லீவு நாளாக இருந்தால் சொல்லவே வேண்டாம் இரவு முழுவதும் டீவி/கம்பியூட்டர் முன் கண்விளித்துவிட்டு பகலில் நல்லா குறட்டை விட்டு தூங்குவது.
5) சுவரில் ஆணி அடித்துவிடுவார்கள் என்று பயப்பட தேவையில்லை. காரணம் அறையில் சாமி படங்களோ அல்லது அம்மா, அப்பா படங்களோ தொங்கவிடுவது இல்லை. அப்படியே படங்கள் இருந்தாலும் அது நடிகர் அல்லது நடிகைகளின் படங்களாகத் தான் இருக்கும். அவை அனைத்தும் செல்லோடேப் கொண்டுதான் ஒட்டுவோம். அதனால் எளிதில் அவற்றை அப்புறப்படுத்த முடியும்.
6) தண்ணீர் செலவாகிடும் என்று பயப்பட தேவையில்லை, காலையில் வீட்டை விட்டு கிளம்பி போனால் இரவுதான் வீட்டிற்கு வருவது. துணிகள் துவைப்பார்களா? என்று எல்லோருக்கும் டவுட் இருக்கும். இதற்கென்றே நான்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி வைத்திருப்போம். மூன்று மாததிற்கு ஒரு தடவை ஊருக்கு போகும் போது துவைத்தால் போதும் என்று.
7) வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்து, போர் அடிக்குதே என்று மாடிப்பக்கம் போய் நின்று ஒரு தம்மை போடலாம் என்று பத்தவைக்கும் போதுதான் ஹவுஸ் ஓனர் மேலே வருவார். என்ன தம்பி இங்க தான் இருக்கீங்களா? என்று மொக்கைப்போட தொடங்கிவிடுவார். அப்படியே நாமளும் நம்ம கதையை கேக்க ஒருத்தர் சிக்கிட்டாரு நினைச்சி மொக்கை போட ஆரம்பிச்சிடுவோம். அவரு நம்மகிட்ட கதை கேக்குறேன் என்கிற பேர்ல ஊர்ல என்ன பயிர் விளையுது, அங்க என்ன ஸ்வீட் பேமஸு, உங்க வீட்ல என்ன பழம் எல்லாம் இருக்குனு வாயில இருந்து புடிங்கிடுவாரு. நாமளும் கதைதானே என்று பக்கத்து வீட்ல விளையுறது எல்லாம் எங்க வீட்டுல விளையுதுனு ஜம்பம் அடிச்சி வைப்போம். இப்படி சொல்லுறதால அப்ப ஒண்ணும் பிரச்சனை இருக்காது, ஆனா தீபாவளி, பொங்கலுனு ஊருக்கு போகும் போது வீட்டை பூட்டி சாவியை ஹவுஸ் ஓனரிடம் கொடுக்கும் போதுதான் பிரச்சனையே. தம்பி இங்க இந்த பழம் எல்லாம் யானை விலை, குதிரை விலை விக்குது ஊர்ல இருந்து வரும் போது அப்படியே கொஞ்சம் எடுத்து வாங்களேன்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்
8) நாம் ரூம்ல பகல்ல இருப்பதே அபூர்வமா தான் இருக்கும். ஏதாவது முக்கிய ஆபிஸ் வேலையை முடிக்கலாம் என்று இருந்தால் அப்ப தான் ஹவுஸ் ஓனர் அக்கா டீவி சீரியல் பார்க்க விடாமல் அடம்பிடிக்கிற மகனை பார்த்து, மேல மாடில இருக்கிற அங்கிளுக்கு ஆபிஸ் இன்னைக்கு லீவாம் நீ போய் அவரோட விளையாடு என்று அனுப்பி வைப்பாங்க. அவங்க ஜாலியா சீரியல் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க, ஆனா பையன் நம்மளை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடுவான்.
9) சமையல் அறை ஒன்றை மறந்தே இருப்பார்கள். அங்கு தான் துணிகள் உலர்த்தப்படும். அதனால் வீட்டில் புகை மற்றும் சுவர் அழுக்காகிவிடும் என்ற பிரச்சனை ஹவுஸ் ஓனருக்கு இருக்காது. அப்படியே சமையல் என்று ஆரம்பித்தாலும் நாலு நாள் கூத்தாக தான் இருக்கும். ஐந்தாவது நாள் ஹோட்டலை தான் தேடுவார்கள். இந்த நாலு நாளு கூத்துக்கு வாங்கிய பாத்திரங்கள் எல்லாம் வீடு காலி பண்ணும் போது ஹவுஸ் ஓனருக்கு தான் சொந்தம்.
10) வீட்ல அது சரியில்லை, இது சரியில்லை என்ற புலம்பல் இல்லாமல் சரியா சொன்ன தேதில வீட்டு வாடகையை கொண்டு போய் ஹவுஸ் ஓனரிடம் சேர்த்துவிடுவது.
பதிவு செய்தவர்
http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/09/blog-post.html
No comments:
Post a Comment